சென்னையில் வாழும் சிறுநாடார் குடியிருப்பு நாடார்கள் உறவின்முறை சங்கம்
எங்கள் வரலாறு
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கிராமம் சிறுநாடார்குடியிருப்பாகும். மேலும் பாரம்பரியமிக்க பண்பாடு, ஆன்மீகச் சின்னங்கள் மற்றும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட சிறு கிராமமாகும். இக்கிராமத்தின் வரலாறு அப்பகுதி மக்களின் வழிபாட்டு முறைகளோடும் பாரம்பரியக் கோயில்களோடும் ஆழமாகப் பிணைந்துள்ளது.
நமது சங்கத்தின்
வரலாறு
சிறுநாடார் குடியிருப்பைச் சார்ந்த சென்னையில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமது மக்களை ஒன்றுசேர்த்து நமக்குள் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆகும் நோக்கத்தோடு இந்த சங்கம் உருவாக்கப்பட்டது
உறுப்பினர்களை ஆராயுங்கள்சங்கம் துவக்கம்
1985ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் தேதியன்று சிறுநாடார் குடியிருப்பைச் சார்ந்த சென்னையில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமது மக்களை ஒன்றுசேர்த்து, நமக்குள் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆகும் நோக்கத்தோடும் நாம் எல்லோரும் சகோதரர்களாக பழகி ஒவ்வொருவர் வீட்டிலும் நடைபெறும் சுப துக்கங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்ற சீரிய எண்ணத்தோடும், நமக்குள் ஓர் அமைப்பு வேண்டும் என நமது ஊரைச் சார்ந்த திரு. P. பால்பாண்டி நாடார், திரு. S. நடேசன் நாடார், திரு. O. பெரியசாமி நாடார், திரு. S. அமிர்தலிங்கம் நாடார், திரு. O. பலவேசமுத்து நாடார், திரு. R. லிங்கபாண்டி நாடார், திரு. P.R. சோமசுந்தரம் நாடார், திரு. T. பொன்பாண்டியன் நாடார் மற்றும் திரு. M. கார்த்திகேயன் நாடார் ஆகியோர்களின் பெரும் முயற்சியினால், நமது ஊரைச் சார்ந்த சென்னையில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் 186 பேர்களின் முகவரி அறிந்து, நேரில் அவர்களை அணுகி, சங்கம் ஆரம்பிப்பதற்கான நோக்கங்கள் விளக்கி, அவர்களின் ஒப்புதலை பெற்று முதல் கூட்டத்தை எல்லோருக்கும் தெரியப்படுத்தி, தீப்பணம்பட்டி நாடார் உறவின்முறை மண்டபத்தில் கூட்டம் கூடுவது என தீர்மானிக்கப்பட்டது. 1985ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் தேதி மாலை 3.00 மணியளவில் சென்னையில் வாழும் சிறுநாடார் குடியிருப்பு நாடார் உறவின்முறை சங்க ஆரம்ப விழாக் கூட்டம் நடைபெற்றது. ஆரம்ப விழாவில் திரு. P. பால்பாண்டி நாடார் சங்க தலைவராகவும், உபதலைவராக திரு. O. பலவேசமுத்து நாடார், செயலாளராக திரு. T. பொன்பாண்டியன் நாடார், உதவி செயலாளர்களாக திரு. T. ஜெயபிரகாஷ் நாடார் மற்றும் திரு. P.R. சோமசுந்தரம் நாடார், பொருளாளராக திரு. S. நடேசன் நாடார், கௌரவ ஆலோசகராக திரு. S.T. ஆனந்தகணேஷ் நாடார் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்களாக 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாதம் ஒருமுறை சங்கக் கூட்டம் நடைபெற்று வந்தது.
முதல் ஆண்டு விழா
சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் சங்கத்தின் முதலாவது ஆண்டுவிழாவை 13 ஏப்ரல் 1986ல் நடத்துவது எனவும், விழாவுக்கு நமது ஊரைச் சார்ந்த சென்னையில் வாழ்ந்து கொண்டு இருக்கும் பெண்பிள்ளைகளுக்கும் அழைப்பிதழ் அனுப்ப தீர்மானிக்கப்பட்டு, விழாவுக்கு அழைக்கப்பட்டனர். தொடர்ந்து இது நடைமுறையில் இருந்து வருகிறது. முதலாவது ஆண்டுவிழா விளாம்பட்டி நாடார் சங்க திருமண மாளிகையில் சங்கத்தின் தலைவர் திரு. P. பால்பாண்டி நாடார் தலைமையில் மலர் வெளீயீட்டுடன் நடைபெற்றது. எல்லோரும் பெரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டது பெரும் மகிழ்ச்சியை தந்தது. சென்னையில் வாழும் சிறுநாடார் குடியிருப்பு நாடார்கள் உறவின்முறை சங்கம் 30-10-1986 அன்று வடசென்னையில் அமைந்துள்ள சங்கங்களின் பதிவாளரிடம் எண். 240/86 ஆக பதிவு செய்யப்பட்டது. சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் எடுத்த முடிவின்படி, வருடம் தோறும் சங்கத்தின் காலண்டர், உறுப்பினர்கள் மற்றும் சென்னையில் வாழும் நமது ஊரைச் சார்ந்த பெண் பிள்ளைகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. சித்திரை 1 தமிழ் வருடப் பிறப்பை முன்னிட்டு, நமது ஊர் சிறுநாடார் குடியிருப்பு ஸ்ரீ முத்தாரம்மன் கோவில் பூஜை சங்கத்தின் சார்பில் நடத்தப்படுகிறது. சங்க உறுப்பினர்களின் குடும்பத்தில் சென்னையில் நடைபெறும் திருமண வைபவங்களில் மணமக்களுக்கு அன்பளிப்பு சங்கத்தின் சார்பில் அளிக்கப்படுகிறது. சங்க ஆண்டுவிழாவின் போது குழந்தைகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. நமது ஊர் ஸ்ரீ சுடலைமாடசுவாமி கோயில் ஆவணி மாத திருவிழாவிற்கு ஆரம்பத்தில் வாண வேடிக்கை செலவுக்காக ரூ. 2,000/- சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டு வந்தது. தற்போது பூஜை செலவுக்காக ரூ. 10,000/- அதற்கும் அதிகமாக சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
புதிய தலைவர் அறிமுகம்
சங்கத்தின் நிர்வாகம் தொடர்ந்து பல நல்ல விஷயங்களை சங்கத்தின் வளர்ச்சிக்காக செய்து கொண்டு வந்த வேளையில் சங்கத்தலைவர் திரு. P. பால்பாண்டி நாடார் அவர்கள் 10 ஏப்ரல் 1987ல் சிவபதம் அடைந்தார்கள். ஜூலை 17, 1987ல் நடைபெற்ற சங்கப் பொதுக்குழு கூட்டத்தில் திரு. O. பலவேழமுத்து நாடார் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு தொடர்ந்து 20 வருடங்கள் நல்லபணியாற்றி வந்தார்கள். சங்க செயலாளர் திரு. T. பொன்பாண்டியன் நாடார், பொருளாளர் திரு. S. நடேசன் நாடார் ஆகியோர் தொடர்ந்து 23 வருடங்களாக தங்களது சிறிய பணியை செய்து வந்தார்கள்.
சங்கத்தின் முன்னேற்றம்
சங்கத்தின் எதிர்கால வளர்ச்சி மற்றும் தேவையை கருத்தில் கொண்டு, சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் தீவிர முயற்சியால் 1996ல் மாதவரம்-மணலி ரோடு திருங்காவூர் கிராமம் ராஜீவ்காந்தி நகரில் 5400 சதுர அடி நிலம் வாங்கப்பட்டு சங்கத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டது.
உறுப்பினர் திட்டம்
சங்கத்தின் கௌரவ ஆலோசகர் திரு. M. கார்த்திகேயன் நாடார் அவர்கள் ஆலோசனைப்படி, மகமையின் மூலம் சங்கத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல முடியும் என்ற கருத்தை சங்கக் கூட்டத்தில் ஏற்கப்பட்டு குறைந்தபட்சம் மாதம் ரூ. 10/-,25/- & 50/- என்றும், அதற்குமேல் உறுப்பினர்களின் வசதிவாய்ப்புக்கு ஏற்றாற்போல் வழங்கலாம் என தீர்மானிக்கப்பட்டு, உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் 2006ஆம் ஆண்டு முதல் சந்தாமுறை நீக்கப்பட்டு மகமை அபிவிருத்தி பண்டு என மாற்றப்பட்டு அனைவரும் மனமுகந்து ஆர்வத்துடன் செலுத்தி வருகிறார்கள். தற்பொழுது மகமை அபிவிருத்தி பண்டு குறைந்தபட்சம் மாதம் ரூ. 25/- ,50/- & 100/- என்றும், அதற்குமேல் உறுப்பினர்களின் வசதிவாய்ப்புக்கு ஏற்றாற்போல் வழங்கலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டு நடைமுறை படுத்தப்பட்டுள்ளது
23-வது ஆண்டு விழா
சென்னையில் வாழும் சிறுநாடார் குடியிருப்பு நாடார்கள் உறவின்முறை சங்கத்தின் 23ஆம் ஆண்டு விழாவில் உறவின்முறையினரின் முகவரி மலரை வெளியிட்டு சிறப்புடன் ஏழாயிரம்பண்ணை நாடார் உறவின்முறை மாளிகையில் நடைப்பெற்றது. நவீன விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப நமது சங்கத்துடன் தகவல் பரிமாறிக் கொள்ள மின் அஞ்சல் (e-mail) முகவரி : snkhindunadar@gmail.com உடன் தொடர்பு கொள்ளும்படி இணைக்கப்பட்டுள்ளது.
வெள்ளி விழா
சங்கத்தலைவர் திரு. O. பலவேசமுத்து நாடார் அவர்கள் காலத்திற்கு பின் அணைத்து உறுப்பினர்களின் ஒருமித்த தேர்வாக திரு. T. பொன்பாண்டியன் நாடார் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நமது சங்கத்தின் 25ம் வருடம் (SILVER JUBILEE) 24.06.2012 வெகு சிறப்பாக இவரின் தலைமையில் கொண்டாடப்பட்டது. இவர் காலத்தில் அனைவரையும் அறைவனைக்கும் பண்பினால் இளம்வயது புது புது உறுப்பினர்கள் ஆர்வமாக சங்கத்தில் இணைந்தனர் மேலும் அன்பான அணுகுமுறையும் , நேர்மையான செயலும் கடந்த 2025 ம் வருடம் வரை இவரே 25 வருடமாக தலைவராக இருக்க செய்தது.
42-வது ஆண்டு விழா
42-வது ஆண்டு விழா சங்கத்தலைவர் திரு. T. பொன்பாண்டியன் நாடார் அவர்கள் சிவபதம் அடைந்தக்காரணத்தினால் அக்டோபர் 12, 2025 ல் நடைபெற்ற சங்கப் பொதுக்குழு கூட்டத்தில் திரு. P.R.S. ராஜசேகரன் நாடார் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு சங்கத்தின் 42 வது ஆண்டு விழா ஜூன் 21, 2026ல் தலைவர் தலைமையிலும் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆதரவுடனும் மிகவும் பிரமாண்டமாய் கொண்டாடப்படுகிறது.மேலும் சங்கத்திற்கு என வலைத்தளம் ஓன்று உருவாக்கப்பட்டுள்ளது இதன் மூலம் உறுப்பினர்களுக்கு மிக எளிமையாக தொடர்புகொள்ளவும் சங்கத்தினை பற்றி அறியவும் உதவும். www.hindunadarsangam.in
சங்கத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்
நமது சங்கத்தின் ஒவ்வொரு நிகழ்வும் ஒற்றுமையையும் பாரம்பரிய பண்பாட்டையும் எடுத்துக்காட்டுகிறது. நமது கூட்டு உணர்வை வலுப்படுத்தும் முக்கிய அம்சங்களை இங்கே காணுங்கள்.
திருவிழா
ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஆண்டு விழாக்கள் மற்றும் சிறப்பு நிகழ்வுகள் சங்க உறுப்பினர்களை ஒன்றிணைக்கும் அரிய தருணங்களாக அமைகின்றன.
நிகழ்வுகளைப் பார்க்கஉறுப்பினர்கள்
தலைமுறை தலைமுறையாக நமது பண்பாட்டை காத்துவரும் குடும்பங்களும் உறுப்பினர்களுமே சங்கத்தின் உண்மையான உயிர்நாடி.
உறுப்பினர்களை பார்க்கபடங்கள்
சங்கத்தின் விழாக்கள், கூட்டங்கள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளின் அழகிய கணங்களை படங்களில் கண்டு மகிழுங்கள்.
படங்கள் பார்க்க